பவானி, டிச.26: பவானி அருகே ஆப்பக்கூடல், பருவாச்சி, நாயக்கனூரை சேர்ந்த 17 வயது பெண், அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டுபடித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்களிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி அந்த மாணவியின் உறவினர்கள் ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையிலான போலீசார், மாயமான மாணவியின் நண்பர்கள், கல்லூரியில் படித்தவர்கள், நெருங்கி பழகியவர்களின் செல்போன் எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பெண்ணை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து கண்காணித்ததில் அம்மாபேட்டை அருகே கடத்தப்பட்ட மாணவியும், கல்லூரி மாணவரும் ஒரு வீட்டில் ரகசியமாக மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மகளிர் போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், மைனர் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்தது. இதனால், மாணவியை கடத்தி சென்ற பவானியை அடுத்த காடப்பநல்லூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் விக்னேஷை (21), போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த பவானி மகளிர் போலீசார், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.