×

இரவு பணியில் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த சிறுமி இறந்ததாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல்

கடலூர், டிச. 23: கடலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் டாக்டர்கள் இல்லாதால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை ேசர்ந்தவர் சந்திரன்(35). கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா(10), அதேப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கீர்த்திகாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு உடன் அவரை தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக ெகாண்டு வந்துள்ளார். அங்கு  இரவு நேர பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை, செவிலியர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அவர் கீர்த்திகாவுக்கு ஊசி போட்டு மாத்திரைகள் வழங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளனர், ஆனால் அவருக்கு மீண்டும் வலி வந்துள்ளது, இதனையடுத்து மீண்டும் தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு கீர்த்திகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று பிற்பகல் 12 மணியளவில் கீர்த்திகாவின் உறவினர்கள் தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணி டாக்டர்கள் இல்லை அதனால்தான் குழந்தை இறந்துவிட்டது, அதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Relatives ,doctors ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...