நெல்லை, டிச. 23: சென்னையில் ஜன. 10ம் தேதி நடைபெறும் திமுக வக்கீல் அணி 2வது மாநில மாநாட்டில் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் இருந்து திரளாகப் பங்கேற்பது என நெல்ைலயில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் வக்கீல்கள் தீர்மானித்துள்ளனர். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை அமைப்பாளர் காளிமுத்து வரவேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் பேசினார். கூட்டத்தில் மத்தியில் ஆளும் பாஜ, மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுகளின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் “தமிழகம் மீட்போம்” “எல்லோரும் நம்முடன்” என மக்களை ஒன்று திரட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது, மத்திய பாஜ ஆட்சி கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவிப்பது.
இச்சட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் அதிமுக அரசை கண்டிப்பது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் திமுகவை அமோக வெற்றிபெறச்செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஆட்சி அமைக்க சபதம் ஏற்பது. சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் திமுக அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்கு வக்கீல் அணியினர் ஒன்றிணைந்து பணியாற்றுவது. தி.மு.க. வக்கீல் அணி சார்பில் சென்னையில் ஜன. 10ல் நடைபெறும் 2வது மாநில மாநாட்டில் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திரளாகப் பங்கேற்பது. வக்கீல் அணி சார்பில் ரூ.2 லட்சம் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் செல்வசூடாமணி, சாமுவேல் பாஸ்கர், குமார், பொன்துரை, வசந்தகுமார், சங்கரபாண்டியன், செல்வகுமார், ராமநாராயண பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். துணை அமைப்பாளர் தவசிராஜன் நன்றி கூறினார்.