மரக்காணம், செப். 18: மரக்காணம் அருகே மின் மாற்றியை சீரமைக்கும்போது மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 ஊழியர்கள் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் மரக்காணம்- திண்டிவனம் சாலையோரம் மின்மாற்றி உள்ளது. இதில் நேற்று பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்ய முருக்கேரி துணை மின் நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வந்தனர். இதில் தற்காலிக ஊழியர்களான ஆவணிபோர் கிராமத்தை சேர்ந்த ரகு (32), கீழ்சிவிரி கிராமத்தைச் சேர்ந்த ஐயனார் (40), கிளியனூர் பகுதியை சேர்ந்த மோகன் (30) ஆகியோர் மின்மாற்றி மேலே ஏறி பழுதை சரி செய்தனர். மற்ற ஊழியர்கள் கீழே நின்று அவர்களுக்கு உதவி செய்தனர்.
அப்போது திடீரென மின்மாற்றியில் மின் சப்ளை வந்துள்ளது. இதனால் வேலை செய்து கொண்டிருந்த 3 பேரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த ரகு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் சிறிய காயத்துடன் முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த ரகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
