சென்னை: பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கும் திட்டமான ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொaடங்கி வைத்து, திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் தமிழக அரசு வழங்கும். பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து, அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும் முழு பொறுப்பையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் பயன்பெறலாம். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை, குழந்தைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
பள்ளி படிப்பை முடித்த பிறகு, அவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும். இந்த சிறப்பு திட்டம், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அன்புக் கரங்கள் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இனிமேல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை இன்னும் கவனித்துக் கொள்ளத்தான் இந்த அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன். உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். இன்றைக்கு மிகவும் முக்கியமான நாள். அண்ணா பிறந்தநாள். நம்முடைய தாய் நிலத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் அவருடைய பிறந்த நாள்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணா நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன். திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல. இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது – தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான், திராவிட இயக்கம். அதனால்தான், மக்களோடு மக்களாக, மக்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்களுடைய தேவைகளை, இந்த சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை.
நீங்களே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். காலையில் ஒரு இடத்தில் மக்கள்கூட பேசிக் கொண்டிருப்பேன். ஈவினிங் பல நூறு கிமீ கடந்து இன்னொரு ஊரில். இன்னொரு பகுதியில் மக்கள்கூட இருப்பேன். இந்த உழைப்பைத்தான், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எங்களுக்கு கற்றுத் கொடுத்திருக்கிறார்கள். இப்படி எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கின்ற காரணத்தால்தான், கடைகோடி மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து எங்களால் செய்ய முடிகிறது. அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம். பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல, பொறுப்பு” தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. இன்றைக்கு, தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்.
இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதந்தோறும் ரூ.2000 வழங்கப் போகிறோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? காலையில் பள்ளிக்கு பசியுடன் வர குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். இன்றைக்கு, 21 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? சமூகத்தின் விளிம்பு நிலையில், எண்ணிக்கையில் சில நூறு – சில ஆயிரம் மட்டுமே இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் – திருநர்கள் ஆகியோருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? இன்னும் சொல்கிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசு, என்ன மாதிரியான நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. ஏராளமான உயிர்கள் பறிபோனது. பலருடைய தொழில்கள் எல்லாம் முடங்கிப் போனது. பல குடும்பங்கள் தங்களுடைய முதுகெலும்பை இழந்து, பலவீனப்பட்டது. உடனே, இந்தியாவுக்கே முன்மாதிரி அரசாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 ஆயிரத்து 775 குழந்தைகளுக்கு, ரூ.511 கோடியே 27 லட்சம் நிவாரணம் வழங்கினோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? இல்லை.
கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 என்று 2021ல் 1,148 குழந்தைகள், 2022ல் 1,112 குழந்தைகள், 2023ல் 1,012 குழந்தைகள் என்று, 3 ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கினோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? இல்லை. அரசு சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கின்ற ஆயிரத்து நானூறு பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் வழங்குகிறோம். இதென்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? இல்லை. சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் இருக்கின்ற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க, அனைத்து சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களையும், தாய்ப்பால் வங்கியுடன் இணைத்திருக்கிறோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? இல்லை. இப்படி ஏராளமான திட்டங்களை, முன்னெடுப்புகளை எங்களால் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இதற்கும் வாக்கு அரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும், கொள்கையும், செயல்திட்டமும், உழைப்பும், எங்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்த பொறுப்பு, சமூகத்தின் கடைகோடி மனிதரையும் கை கொடுத்து மேலே தூக்கி விடுவதற்கான வாய்ப்பு. அந்த கையாகத்தான் என்னுடைய கை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிதான், இருந்து கொண்டிருக்கிறது.
பெற்றோர் வேலைக்கு செல்கிறார்கள் என்று, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறோம். பெற்றோரே இல்லாத குழந்தைகளை, சிங்கிள் பேரண்ட் இருக்கின்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக் கரங்கள் திட்டம். இந்த திட்டத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களிடம் சொல்லி, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் கைவிடப்பட்ட குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருப்பவரின் குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், அவர்களுடைய குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அவர்களுடைய குழந்தைகள் என்று கணக்கெடுக்கச் சொன்னோம். அப்படி முதல்கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கும், பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் இனிமேல் மாதந்தோறும் ரூ.2000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம். உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி வரவேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம், எங்களுடைய லட்சியம். இந்த லட்சியத்துக்கு துணையாகும் நம்முடைய திராவிட மாடல் அரசின் கரம்தான், அன்புக் கரம். நாளைக்கு நீங்கள் படித்து, டாக்டராக – இன்ஜினியராக – சயின்டிஸ்டாக – ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக – அரசியல்வாதியாக உயர்ந்து, இந்தச் சமூகத்துக்கு, இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உங்களுடைய வெற்றி, தமிழ்நாட்டின் வரலாறை சொல்லவேண்டும். அதற்கு உங்களுக்கு உதவியாளனாக, உங்கள் நண்பராக, உங்கள் பெற்றோராக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
