- நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி
- சென்னை
- நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி
- -உதவிக் குழுக்கள்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழு மகளிரின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களின் பயனாக சுயஉதவிக் குழுவினர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்பு பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சியினை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார். அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் 46 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென 5 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வார இறுதி நாட்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளது. இத்தகைய சிறப்பு மிகுந்த விற்பனை கண்காட்சிக்கு அனைவரும் வந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷஜீவனா, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ஆஷா அஜித் மற்றும் கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
