கோத்தகிரி : உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது.
இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வருகை புரிந்தனர்.
தற்போது குளிர் காலம் என்பதாலும் அவ்வப்போது பெய்து வந்த சாரல் மழையின் காரணமாக நிலவும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கோடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையில், இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து சென்றனர்.
