×

நடப்பு சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை

சேதுபாவாசத்திரம், டிச. 18: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் கடும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதேநேரம் நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தட்பவெட்ப மாறுதல்களால் மரக்காவலசை, சொக்கநாதபுரம், பள்ளத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுகிறது.

நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் ஆயுட்காலம் 14 முதல் 21 நாட்களை கொண்டது. இந்த தாக்குதலால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையை போல தோன்றும். பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும்.

தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள் தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். இதை கட்டுப்படுத்த நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப்பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன் நோய்க்கு எதிர்ப்பு திறனுடைய குறுகியகால ரகங்களாகிய ஏடிடி 39, ஏடிடி 45, மத்தியகால ரகமான எம்டியு 3 ஆகியவற்றை நடவு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குமேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்தக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தை இட வேண்டும். ஆனைக் கொம்பன் இயற்கை எதிரிகளான நீள்தாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். மேலும் விபரங்கள் அறிய தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அல்லது வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...