×

உடுமலை அருகே 1000 ஆண்டு பழமையான தூம்பு கண்டெடுப்பு

திருப்பூர், டிச.18:  உடுமலை அருகே 1000 ஆண்டுகள் பழமையான கிரந்த வரி வடிவத்துடன் கூடிய தூம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சதாசிவம், பொன்னுச்சாமி மற்றும் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் உடுமலை தாலுகாவில் அமைந்துள்ள வடபூதிநத்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1000 ஆண்டுகள் பழமையான தூம்பை கிரந்த கல்வெட்டுகளுடன் கூடிய கூம்பு கண்டறிந்துள்ளனர்.ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது: இடைக்கால கல்வெட்டுக்களில் வீரநாராயணப்பெருவழி என அழைக்கப்படும் பெருவழியில் அமைந்துள்ள ஊர் தான் வடபூதிநத்தம். இங்கு பண்டைய ரோம வணிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏற்கனவே 1,500 வெள்ளி ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன. இங்கு உள்ள பெரிய குளத்திற்கு திருமூர்த்தி மலையில் பெய்யும் மழைநீர் வந்து சேர்கிறது. இன்று வரை இந்த குளத்துநீர் வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது.
 
இந்த பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்டபோது வலம்புரி விநாயகர் மற்றும் லட்சுமி உருவங்களுடன் கூடிய சிற்பத்தின் பின்புறத்தில் தூம்பு இருப்பதையும், இதில் வலம்புரி விநாயகர் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் 4 வரிகளில் கிரந்த எழுத்துகள் இருப்பதையும் கண்டறிந்தோம். தமிழ் கல்வெட்டுகளில் வடமொழி சொல்லை பயன்படுத்த நேர்கின்றபோது இவற்றை எழுத கிரந்த எழுத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். இங்குள்ள தூம்பின் மேல்பகுதியில் வலம்புரி விநாயகர் 4 கரங்களுடன் பத்மபீடத்தில் அமர்ந்த நிலையில் கீழ் இரு கைகளைத்தொடையின் மீது வைத்தபடியும், மேல் இரு கைகளில் வலது கையில் அங்குசமும், இடது கையில் மலரையும் பிடித்தபடி காணப்படுகிறார். இத்தூம்பின் உயரம் 140 செ.மீ. மற்றும் அகலம் 50 செ.மீ. ஆகும். இத்தூம்பின் கீழ்ப்பகுதி உடைந்துள்ளது. மிகவும் அழகான மாலைத்தொங்கல் உடன் காணப்படும் இத்தூம்பின் கீழ் பகுதியில் உள்ள கிரந்த கல்வெட்டை இந்திய வரலாற்று பேரறிஞர் சுப்பராயலு வாசித்தார்.

ஸ்வதிஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டு கி.பி. 1000ஐ ஒட்டி உள்ளதாகவும் என்று கூறினார். மேலும் கல்வெட்டு உடைந்து உள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. 70 செ.மீ. உயரமும், 50 செ.மீ. அகலமும் கொண்ட இத்தூம்பில் லட்சுமி பத்மாசன நிலையில் அமர்ந்தபடி வலது மற்றும் இடது கையில் மலரை பிடித்தபடி உள்ளார். இந்த கல்வெட்டு மற்றும் தூம்பின் மூலம் கி.பி 10ம் நூற்றாண்டிலேயே கொங்கு மண்டலத்தில் ஏரி, குளங்களில் தேங்கிய நீரை வாய்க்கால்கள் மூலம் வேளாண்மைக்கு பயன்படுத்தி உள்ளதை நாம் அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Udumalai ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு