×

கட்சி நிர்வாகிகள், மீனவர்களுடன் ஆலோசனை நடிகர் கமலஹாசன் குமரியில் இன்று பிரசாரம்

நாகர்கோவில், டிச.16 : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை, மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் தொடங்கி உள்ளார். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், இன்று (16ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். காலை 10 மணிக்கு குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அஞ்சுகிராமம் சந்திப்பு, மயிலாடி சந்திப்பு, சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில் முன், நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் திறந்தவேனில் இருந்தவாறு பேசுகிறார். பின்னர் பகல் 12.30க்கு, நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள மண்டபத்தில் மகளிர், இளைஞரணி உள்பட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார். மாலை 3 மணியளவில் தக்கலை சந்திப்பில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு மார்த்தாண்டம் செல்லும் கமலஹாசன், கட்சி அலுவலகத்ைத திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு தேங்காப்பட்டணம் துறைமுகத்தை பார்வையிட்டு, மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பிரசாரம் முடிந்து அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் கமலஹாசன், விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Tags : Kamalhasan Kumari ,party executives ,fishermen ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...