புதுடெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (ஆதார்) தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பள்ளிகளில் பயின்று வரும் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் கட்டாயமாக புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக பள்ளிகளில் முகாம்களை ஏற்பாடு செய்வது அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு பிளஸ் என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.இதன் மூலம் பயோமெட்ரிக் புதுப்பிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் உள்ள மாணவர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதற்கு இது முக்கியமானது. கிட்டத்தட்ட 17 கோடி ஆதார் எண்களின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலுவையில் உள்ளது. மாணவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்காவிட்டால் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கும், நீட்,ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதில் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
