×

துறைமுக பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு மும்பையில் 5 நாட்கள் இந்திய கடல்சார் வாரம்: நீர்வழிகள் அமைச்சக செயலாளர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகச் செயலாளர் ராமச்சந்திரன், சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை துறைமுகம் இந்திய கடல்சார் வாரம் 2025க்கான ஒரு விளம்பர நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது 27 முதல் 31 அக்டோபர் 2025 வரை மும்பையில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இதில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, முக்கிய துறைமுகங்கள், தனியார் துறைமுகங்கள் மற்றும் முனையங்கள், தேசிய மற்றும் பிராந்திய வாணிப மற்றும் தொழில்துறை அறக்கட்டளைகள், ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம், கப்பல் சேவைகள், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் உள்பட கடல்சார் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் நாட்டின் முக்கிய தளம் ஆகும்.

இந்த நிகழ்ச்சி உலகளாவிய மற்றும் உள்ளூர் தலைவர்களை ஒருங்கிணைத்து உரையாடல், புதுமை மற்றும் கொள்கை முயற்சிகளை ஊக்குவிக்கின்றது. இவை நீடித்த மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான கடல்சார் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளன. இந்த நிகழ்ச்சி 1,00,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஒருங்கிணைக்க உள்ளது. இது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல்சார் இந்திய உச்சிமாநாடு 2016 இந்தியாவின் முதல் பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு கொரோனா தொற்றுநோயால் இணையவழியாக நடத்தப்பட்டது. மேலும் உலகளாவிய கடல்சார் இந்திய உச்சிமாநாடு (GMIS) 2023, இந்தியாவின் கடல்சார் கண்ணோட்டத்தை பசுமை வழித்தடங்கள், டிஜிட்டல் மயமாக்கல், தன்னாட்சி கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக அடிப்படையிலான வளர்ச்சிக்கு மையப்படுத்தி நடத்தப்பட்டது.
முந்தைய கடல்சார் இந்திய உச்சி மாநாடுகளில், சென்னை துறைமுகம் 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது.

இந்த முறை, அதிகமான தேவையால், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், 27 அக்டோபர் முதல் 31 அக்டோபர் வரை ஒரு முழு வாரத்திற்காக ‘இந்திய கடல்சார் வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வழிப் போக்குவரத்து அதிகரிக்கும் நோக்கத்தோடும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நோக்கத்தோடு விரைவில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சொகுசு கப்பல் இயக்கப்படும். உள்நாட்டு பகுதியில் சொகுசு கப்பல் சேவையை அதிகரிக்கும் விதமாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் இயக்க இருக்கிறது. இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

Tags : Port ,Indian Maritime Week ,Mumbai ,Secretary of ,Ministry of Waterways ,Ramachandran ,Chennai ,Ministry of Ports, ,Shipping and Waterways ,Government of India ,Chennai Port ,Kamaraj Port ,Sunil Paliwal ,Indian Maritime Week 2025… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...