புதுடெல்லி: தேர்தல்களில் வாக்குத்திருட்டு நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக வழக்கறிஞர் ரோஹித் பாண்டே என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பெங்களூரு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மகாதேவ்பூரா பகுதியில் ஐந்து வகையான வாக்கு திருட்டு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது நாடு முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.மேலும் வெளிப்படையான நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும் தேர்தல் நடைபெறும் பொழுது அதற்கான வாக்குப்பதிவு விவரங்கள் முழுமையாக சேகரிப்பது, சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்துவது, வாக்காளர் பட்டியலை மின்னணு முறையில் தேடுவதற்கு ஏற்ப நவீன முறையில் வெளியிடுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்கான தனித்தனி உத்தரவுகளை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
