சென்னை: நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 நவம்பர் மாதம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
