காரிமங்கலம், ஆக.20: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கூடும் சந்தை பிரசித்தம். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 400 ஆடுகள், 450 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.36 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.43 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. இதே போல், நாட்டுக்கோழிகளையும் சந்தைக்கு கொண்டு வந்து குவித்தனர். நாட்டுக்கோழிகளை பொறுத்தவரை ரூ.3 லட்சத்திற்கு விற்பனையானது. ஆக மொத்தம் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை ரூ.82 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. மழை காரணமாக கால்நடை விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

