சென்னை: வண்டலூர் காவல்துறை பயிற்சியகத்தில் 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (18.08.2025) வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. வணிகவரி அலுவலர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரூ 77 லட்சம் மதிப்பீட்டில் 18.08.2025 முதல் 30.09.2025 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாம், வணிகவரித் துறை செயல்பாடுகள் தொடர்பான சட்டங்கள்.
விதிகள் மற்றும் நடைமுறைகள், சட்டப்பூர்வ கடமைகள் சமீபத்திய வரிச்சட்டங்கள் வரிச் சேவை மேம்பாட்டுத் திட்டங்கள், அதிநவீன தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த விழிப்புணர்வு,தினந்தோறும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப. வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன், இ.ஆ.ப. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக அலுவலர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
