×

(தி.மலை) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 29,923 மாணவர்கள் எழுதுகின்றனர் 143 தேர்வு மையங்கள்: பறக்கும் படை கண்காணிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை

திருவண்ணாமலை, ஏப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு நாளை தொடங்குகிறது. அதையொட்டி, 143 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நாளை தொடங்கி, வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 10.10 மணிவரை வினாத்தாளை படித்துப் பார்க்கவும், 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எழுதும் மாணவரின் விபரங்களை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 10.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், மொத்தமுள்ள 501 உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 15,302 மாணவர்கள், 14,821 மாணவிகள் உள்பட ெமாத்தம் 29,923 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு 138 தேர்வு மையங்கள், தனித்தேர்வர்களுக்கு 5 மையங்கள் உள்பட மொத்தம் 143 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்களை கொண்டுசெல்லவும், விடைத்தாள்களை கொண்டுவந்து சேர்க்கவும் 36 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வினா, விடைத் தாள்களை கொண்டுசெல்லும் வழித்தட அலுவலர்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க, 147 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 152 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,102 அறை கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,322 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, 92 பேர் கொண்ட பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்குமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post (தி.மலை) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 29,923 மாணவர்கள் எழுதுகின்றனர் 143 தேர்வு மையங்கள்: பறக்கும் படை கண்காணிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை appeared first on Dinakaran.

Tags : T.Malaya ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,Tamil Nadu… ,
× RELATED (தி.மலை) குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய...