×

முகப்பேரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; 7 பெண்கள் மீட்பு: பெண் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பன்னீர்நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆணையர் உத்தரவின்படி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மாறு வேடத்தில் மசாஜ் சென்டர் அருகே கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது மசாஜ் சென்டருக்கு ஆண்கள் வந்து செல்வது தெரிந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் திடீரென மசாஜ் சென்டருக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திரா, கொல்கத்தா மற்றும் சென்னை மாதவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர், அங்கிருந்த 7 பெண்களை மீட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு ஆந்திரா மற்றும் மாதவரம், மதுரவாயல் ஆகிய பகுதியில் வசிக்கும் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்து 4 பெண்களை ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த மசாஜ் சென்டர் பெண்உரிமையாளர் உட்பட சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (32), ரமேஷ் (33), ராமமூர்த்தி (35), பிரகாஷ் (53) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், மசாஜ் சென்டர் பெண் உரிமையாளரை புழல் பெண்கள் சிறையிலும், மற்ற 4 பேரை புழல் ஆண்கள் சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முகப்பேரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; 7 பெண்கள் மீட்பு: பெண் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Panneernagar ,Chennai ,Mukabbar ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு...