×

ஜபிஎல் கிரிக்கெட் தொடர் 2023: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

அகமதாபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் நேற்றிரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் டோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின்ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். கில் 3 ரன்னில் இருந்த போது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கில், தேஷ்பாண்டே மற்றும் தீக்ஷனா ஓவர்களில் பவுண்டரி ஓடவிட்டார்.

குஜராத் அணி 67 ரன்களை எடுத்த நிலையில், சுப்மன் கில் 39 ரன்களில் (20 பந்து, 7 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து சஹாவுடன், தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுதர்சன் முதல் 12 பந்தில் 10 ரன் மட்டுமே எடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். சஹாவின் வெளியேற்றத்துக்கு பிறகு பொறுப்பை கையில் எடுத்தக் கொண்ட சாய் சுதர்சன் சென்னை பந்து வீச்சை சிதறடித்தார்.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது குஜராத் அணி.

பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்ய ஆரமித்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கேப்டன் டோனி (0) ஏமாற்றம் அளித்தார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது.

The post ஜபிஎல் கிரிக்கெட் தொடர் 2023: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் appeared first on Dinakaran.

Tags : JPL Cricket Series 2023 ,Chennai Super Kings ,Ahmedabad ,IPL Cricket Series 2023 ,Gujarat ,Dinakaran ,
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...