மதுரை: பேருந்தில் திடீரென பிரேக் பிடித்ததால் படிக்கட்டில் தவறிவிழுந்து கண்டக்டர் பலியானார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூரை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், விசலூரை சேர்ந்த கருப்பையா (48) கண்டக்டராக பணியாற்றினார். மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் சென்றபோது சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.
இதை கவனித்த டிரைவர், பேருந்தை நிறுத்த திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பேருந்தின் கதவு மூடாமல் இருந்ததால், அருகே டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர் கருப்பையா, படிக்கட்டு வழியாக சாலையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கருப்பையாவை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி கருப்பையாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர், கருப்பையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கருப்பையா உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பேருந்தின் கதவு மூடப்படாத நிலையில் கண்டக்டரே தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார் பேருந்தின் கதவை மூடாததால் கண்டக்டர் தவறி விழுந்து பலி; மதுரை அருகே பரிதாபம் appeared first on Dinakaran.
