×

கொரோனா சிகிச்சை பெற்ற மூதாட்டிக்கு காப்பீடு தொகை தர மறுப்பது பொதுநலனுக்கு எதிரானது: ஒரு வாரத்திற்குள் வழங்க உத்தரவு

மதுரை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 73 வயது மூதாட்டிக்கு காப்பீடு தொகை தர மறுப்பது பொதுநலனுக்கு எதிரானது என்பதால், ஒரு வாரத்துக்குள் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பொற்கமலம் (73), சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் எனது ஓய்வூதியத்தில் இருந்து மாதம் ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது.

கடந்த 24.8.2020ல் தென்காசி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றேன். 10 நாள் சிகிச்சைக்கு ரூ.2,62,596 கட்டணம் செலுத்தினேன். இதை இன்சூரன்ஸ் திட்டத்தில் ேகட்டு விண்ணப்பித்தேன். தீவிரம் அல்லாத சாதாரணமான கொரோனா சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் பொருந்தாது எனக்கூறி நிராகரித்தனர். பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், மருத்துவமனைகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், ஓட்டல்கள் கூட கொரோனா சிகிச்சை கூடங்களாக செயல்பட்டன.

இக்கட்டான சூழலில், மருத்துவமனையில் இடம் கிடைத்தாலே போதும் என்ற நிலையில் தான் மனுதாரர் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கான காப்பீடு தொகையை வழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற நிலைக்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது அரசு அதிகாரிகள் போதிய அக்கறை காட்டாததே காரணம். மனுதாரருக்கு பணம் தர மறுத்தது மனிதாபிமானமற்றது, நியாயமற்றது என்பதை விட பொதுநலனுக்கு எதிரானது. எனவே, மனுதாரர் ஒரு வாரத்திற்குள் மீண்டும் மனு செய்ய வேண்டும். அதை அதிகாரிகள் பரிந்துரைத்து, ஒரு வாரத்திற்குள் இன்சூரன்ஸ் பணத்தை வழங்க வேண்டும். வயதான காலத்தில் மனுதாரர் நீதியை தேடி நீதிமன்றத்திற்கு வரவைத்து சிரமத்தை ஏற்படுத்தியதற்காக, எதிர்மனுதாரர்கள் ரூ.25 ஆயிரம் அபராதத்தை முன்மாதிரியாக நினைத்து வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post கொரோனா சிகிச்சை பெற்ற மூதாட்டிக்கு காப்பீடு தொகை தர மறுப்பது பொதுநலனுக்கு எதிரானது: ஒரு வாரத்திற்குள் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Corona ,Madurai ,
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?