×

குன்னூர் கோல்ப் மைதானத்தில் காட்டு மாடுகள் 20 நிமிடம் ஆக்ரோஷ மோதல்

ஊட்டி: குன்னூர் அருகே கோல்ப் மைதானத்தில் இரு காட்டு மாடுகள் 20 நிமிடங்களுக்கு மேலாக ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் 55 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், பல வகை மான்கள், பறவைகள் உள்ளிட்டவைகள் வாழ்கின்றன. குறிப்பாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் அவைகள் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை காண முடியும். குறிப்பாக நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட குன்னூர், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையில் காட்டு மாடுகள் உள்ளன.

குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வன பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு மாடு கூட்டம் மைதானத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தன. இக்கூட்டத்தில் இருந்த 2 காட்டு மாடுகள் ஒன்றுக்கொன்று வீரர்கள் போல சண்டையிட்டு ஆக்ரோஷமாக கொம்புகளால் முட்டிக்கொண்டன. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சண்டை நீடித்த நிலையில் அங்கிருந்தவர்கள் வனத்திற்குள் விரட்டியடித்தனர். காட்டு மாடுகளின் ஆக்ரோஷ சண்டையை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post குன்னூர் கோல்ப் மைதானத்தில் காட்டு மாடுகள் 20 நிமிடம் ஆக்ரோஷ மோதல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில்...