×

கோவை விமான நிலைய விரிவாக்கம்: 472 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 472 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு கேட்டுவந்தது. 2010-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 472 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 632 ஏக்கர் தேவை என விமான போக்குவரத்து ஆணையம் கேட்டிருந்த நிலையில் நிலம் ஒப்படைக்கப்பட்டது. எந்தவித நிபந்தனையும் இன்றி 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிலத்தை ஒப்படைத்தது. தமிழ்நாடு அரசு நிலத்தை ஒப்படைத்துள்ளதால் விரைவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் சர்வதேச விமானங்களை இயக்குவது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்பதால் பெரிதும் உதவியாக இருக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் முடியும்போது தற்போதுள்ள 9,500 அடி நீளமுள்ள ஓடுபாதை 12,500 அடியாக அதிகரிக்கும். திமுக அரசு பொறுப்பேற்றது முதலே விமான நிலைய விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. மதுரைக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை தொகுதி மக்களவை உறுப்பினரான கனிமொழி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரிவாக்க பணிகள் முடிந்தவுடன் தமிழ்நாட்டின் 2ஆவது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி மாறும். விரிவாக்க பணிகள் முடிவடைந்தால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இரவு நேரத்திலும் விமானங்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மூலம் அந்த மாவட்டம் மட்டுமின்றி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களும் பயன்பெறும்.

தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் நிலையில் விமான நிலைய விரிவாக்கம் தொழில்துறையினருக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

The post கோவை விமான நிலைய விரிவாக்கம்: 472 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Goa Airport ,Government of Tamil Nadu ,EU Government ,Chennai ,Tamil Nadu ,Dimuka ,Govt of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...