×

ரூ.5.25 கோடியிலான புதிய கட்டிட திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

* காமராஜர் துறைமுக நிர்வாகம் பாஜவின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

பொன்னேரி: பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தால் ரூ.5.25 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளை அமைக்கும் வகையில் காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்ட நிதியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 15 வகுப்பறைகள் கொண்ட இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால், மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா ஆகியோர் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

முன்னதாக கட்டிட திறப்பு விழாவிற்காக வருகை தந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவாலின் வாகனத்தை நுழைவாயில் முன்பு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ், திமுக, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் வழிமறித்தனர். அரசு கல்லூரியில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தலைமையிலான அதிகாரிகள் கல்லூரிக்குள் சென்று கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி காமராஜர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசின் நிறுவனமாக செயல்படும் காமராஜர் துறைமுக நிர்வாகம் பாஜ அரசின் கைப்பாவையாக, தன்னிச்சையாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ, எம்பி, நகராட்சி தலைவர் உள்ளிட்ட பெயர்கள் அழைப்பிதல் மற்றும் பேனரில் அச்சடிக்கப்படவில்லை. விழா நடைபெறும் காலை 10 மணிக்கு முன்பாக அரைமணி நேரத்திற்கு முன்பு கல்லூரி சார்பில் இருந்து அழைப்பு விடுத்துள்ளனர். தன்னிச்சையாக இந்த திறப்பு விழா நடப்பது கண்டிக்கத்தக்கது என எம்எல்ஏ குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எம்எல்ஏ அதனை ஏற்க மறுத்தார்.

தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடிகளுடன் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் எம்எல்ஏவிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வந்தார். அப்போது, எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால்,

சுனில் பாலிவால், மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பாதியில் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்தப் போராட்டத்தில் எம்எல்ஏவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நெடுஞ்செழியன், அமரகவி, அபூபக்கர், மதன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயசீலன், வினோத், புருஷோத்தமன், எபினேசர், சுகு, ஜோதீஸ்வரன், பரசுராமன், பிரகாஷ், கந்தசாமி, தினேஷ், பாஸ்கர், மகேஷ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரூ.5.25 கோடியிலான புதிய கட்டிட திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kamaraj Port ,BJP ,Dinakaran ,
× RELATED கும்மனூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு