×

அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் சென்னையில் பாஜ கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் சென்னையில் இன்று பாஜ கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக, பாஜ இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அதன் பிறகு பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாஜவில் மாற்றம் ஏற்பட்டது. பாஜ தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாஜதான் என்றும் கூறி வந்தார். வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வந்தார். இதற்காக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பற்றி பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலையும் வெளியிட்டார். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா தொடங்கி, அண்ணா வரை சர்ச்சை கருத்தை தெரிவித்து வந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே நேரத்தில் எடப்பாடி பற்றியும் தரக்குறைவாக அண்ணாமலை கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினார். இதனால், கொதித்து எழுந்து மானம் கெட்டு போய் பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா? என்று அதிமுக மூத்த தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து அண்ணாமலை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். அதிமுக கூட்டணி முறிவு குறித்து டெல்லி மேலிடம் தான் பதில் சொல்லும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறி வந்தார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அண்ணாமலை அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். புறப்படும் முன்பாக அரசியலில் இருந்து என்னை விடுவித்தால் தோட்டத்துக்கு சென்று விடுவேன். தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது” என்று தனது விரக்தியை தெரிவித்தார். இதனால், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற போகிறார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முயன்றார். இருவரும் மறுத்து விட்டனர்.

தொடர்ந்து அண்ணாமலை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது உங்கள் வாய்பேச்சால் தமிழகத்தில் ஒரு நல்ல கூட்டணியை கெடுத்து விட்டீர்கள். வர உள்ள தேர்தலில் தோல்விக்கு நீங்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். உங்கள் மீது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கடும் கோபமாக உள்ளனர். இதனால் கடும் அப்செட்டான அண்ணாமலை கூட்டணி முறிவுக்கு பொறுப்பேற்று நான் வேண்டும் என்றால் ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்து விட்டனர். தொடர்ந்து நீங்கள் கட்சி பொறுப்பில் இருங்கள். அதே நேரத்தில் கூட்டணி தொடர்பாகவும், அதிமுக குறித்தோ பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். சிறிது காலத்திற்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறி விட்டனர். அதே நேரத்தில் டெல்லியிலேயே இரவு தங்கியிருந்த அண்ணாமலை, அமித்ஷாவை சந்திக்க முற்பட்டார். முடியாமல் போனது.

இதற்கிடையில் பாஜவுடன் கூட்டணி முறிவு நான் எடுத்த முடிவு இல்லை. தொண்டர்கள் எடுத்த முடிவு என்று ஒரு வாரத்திற்கு பிறகு தனது கருத்தை எடப்பாடி பழனிசாமி பதிவு செய்தார். இதனால், அதிமுக கூட்டணியில் பாஜவை மீண்டும் சேர்க்காது என்று தெரிகிறது. இதனால் பாஜ தலைமையில் தமிழகத்தில் தனி அணி உருவாகும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் இன்று காலை கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் கரு.நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட அனைத்து கோட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரபூர்வமாக விலகி உள்ளது. எனவே, மாவட்ட ரீதியாக பாஜவை எப்படி பலப்படுத்துவது ? பூத்து கமிட்டி அமைப்பது எந்தளவில் உள்ளது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராவது? என்னென்ன வியூகங்களை வகுப்பது? தொகுதியில் உள்ள நிலவரம் குறித்தும் பெருங்கோட்ட பொறுப்பாளர்களுடன் கேசவ விநாயகம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இல்லாத நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது பாஜகவினரிடைய பெரும் பரபரப்பை ஏறு்படுத்தியுள்ளது.

The post அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் சென்னையில் பாஜ கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Bajakota ,Chennai ,Annamalai Delhi ,Dinakaraan ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!