மதுரை: மதுரை வந்த விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த பயணியின் உடைமையில் 6 பாக்கெட்டுகளில் பச்சை நிறத்தில் வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் கேட்டபோது, பயணி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பொருளை சோதனை செய்ததில், உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா என்பதும், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக சிகரெட்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அலி அப்துல் காதர் (52) என்பதும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அலி அப்துல் காதரை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
The post விமானத்தில் ரூ.3 கோடி கஞ்சா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.
