குமாரபாளையம், டிச.3: குமாரபாளையத்தில் இருந்து, பள்ளிபாளையம் செல்லும் வழியில் எம்ஜிஆர் நகர் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பை கழிவுகள், சாலையோரம் கொட்டப்பட்டது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் வாகனங்களில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுது. நகராட்சியை ஒட்டிய இப்பகுதி, குப்பாண்ட பாளையம் ஊராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மெயின்ரோட்டில் மறியல் போராட்டம் நடத்த புறப்பட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி அசோக்குமார், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பை பிரச்னைக்கு இரண்டொரு நாட்களில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.