×

பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஸ்பைசஸ் பார்க் எப்போது செயல்படுத்தப்படும்?

சிவகங்கை, பிப்.19:  சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பைசஸ் பார்க் செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் மத்திய அரசு சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பைசஸ் பார்க் (தொழில் பூங்கா) கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் 40 பிளாட்கள் அமைக்கப்பட்டது. வாசனை பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, பெருங்காயம் முதலியவற்றை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் மத்திய அரசின் 33 சதவீத மானியம் கிடைக்கும். பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1500 கோடி வருவாயும், சுமார் 2000ம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கும் வகையில் இப்பூங்காவை அப்போதைய மத்திய அரசு அமைத்தது.

சிவகங்கை, ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள் வாசனை பொருட்களை இங்கு கொண்டுவந்து அரைத்து ஏற்றுமதி செய்யும் வகையில் திறக்கப்பட்ட இந்த ஸ்பைசஸ் பூங்கா இதுவரை முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. செயல்படாத நிலையில் இருப்பதால் ஸ்பைசஸ் பார்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டியது. இந்நிலையில் மாநில அரசின் நகர் ஊரமைப்பு இயக்குநரகத்தின் சார்பிலான அனுமதி பல ஆண்டுகளுககுப் பிறகு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதையடுத்து கட்டிடங்கள், வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஆனால் அதன்பிறகும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இல்லை. மிகப்பெரிய திட்டமான ஸ்பைசஸ் பார்க் திட்டம் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டிருப்பது இப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை வர்த்தகர்கள் சிலர் கூறியதாவது,‘அன்றைய மத்திய அரசு இப்பூங்காவை அமைத்ததன் நோக்கமே வறட்சி மாவட்டமான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டுதான். விவசாயிகள், வர்த்தகர்கள் இங்குள்ள பிளாட்களை குத்தகைக்கு எடுக்கும் வகையில்தான் பூங்கா அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் பூங்கா செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களும் பயன்பாடில்லாமல் உள்ளது. செயல்படுத்தப்படாமல் தொடர்ந்து முடக்கப்படுவதால் இத்திட்டமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் இந்த பூங்காவினால் எவ்வித பயன்பாடும் இல்லை என முழுமையாக முடக்கப்படும். எனவே அவ்வாறு இல்லாமல் முந்தைய மத்திய அரசின் திட்டப்படியே தொழில் பூங்காவை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Spices Park ,
× RELATED பணியாளர்களும் இல்லை... பராமரிப்பும்...