×

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை, பிப்.19: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹85.3 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 5 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த யோகேஷ் காந்த் (23) என்பவர் சுற்றுலா பயணியாக இலங்கை சென்று, சென்னை திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது, அவரது உள்ளாடைக்குள் 824 கிராம்  தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு 35 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.  அதேபோல் அபுதாபியில் இருந்து எட்டியார்டு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் ேசாதனையிட்டனர். அப்போது, கேரள மாநிலம்  கோழிக்கோட்டை சேர்ந்த சவுக்கத் அலி (32) என்பவர் அபுதாபிக்கு சுற்றுலா பயணியாக சென்று, சென்னை திரும்பி வந்தார். அவரை சோதித்தபோது அவரது உள்ளாடைக்குள் 426 கிராம் மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது.  இதன் மதிப்பு 18 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று காலை 7.15 மணிக்கு சென்னை வந்தது. அதில், சென்னையை சேர்ந்த ஜமாத் கான் (49), ரகீத் (48) ஆகிய 2 பேர் மலேசியா சென்று, சென்னை திரும்பி வந்தனர். அவர்கள்  2 பேரிடம் இருந்த அலங்கார மீன் தொட்டி மற்றும்  ஹேர் டிரையர் ஆகியவற்றை சோதனையிட்டபோது, அதில் தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் எடை 520 கிராம். மதிப்பு 21 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.  இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் சென்னையை சேர்ந்த முகமது இப்ராகிம் (58) சுற்றுலா பயணியாக சென்று, சென்னை வந்தார். அவரது பாக்கெட்டை சோதித்தபோது பாக்கெட்டில் 268 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதன் மதிப்பு 11.3 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 85.3 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை, கேரளா, சென்னையை சேர்ந்த 5 பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags : airport ,Chennai ,
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்