தர்மபுரி, பிப்.17: தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்தார்.
தர்மபுரியில் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, சத்திய மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் பாரிமோகன், இல.வேலுசாமி, வணங்காமுடி, அரசாங்கம், இமயவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில தலைவர் ஜிகே மணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை, பாசனத்திட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, கல்விக்கு முன்னுரிமை அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதை வரவேற்கிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் அறிவிக்க வேண்டும். கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். 7 தமிழர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், கோடைக்கு முன்பே வறட்சி ஏற்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. மொரப்பூர்-தர்மபுரி ரயில் இணைப்பு திட்டத்திற்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து, பணியை விரைவு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.