நாமக்கல், பிப்.13: நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வங்கிகளிலும், விவசாயிகள் கிசான் கிரடிட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், கிசான் கிரடிட் கார்டு (விவசாயக் கடன் அட்டை) பெறும் திட்டம், அனைத்து வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 84,907 விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள், ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர்களை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, விவசாயக் கடன் அட்டை பெறலாம். மேலும், கிராம பஞ்சாயத்து செயலர்களும், வேளாண் துறை அலுவலர்கள் பிரதம மந்திரியின் சம்மான் நிதித் திட்டப் பயனாளிகளைக் கண்டறிந்து, கிசான் கடன் அட்டை வங்கியில் இருந்து பெற தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு கிசான் கிரடிட் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.