காரிமங்கலம், ஜன.28: காரிமங்கலம் அருகே கோயில் திருவிழா நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியில், பொங்கல் திருவிழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம், தேவாதி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அப்பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது, நிகழ்ச்சியை காண பெரியாம்பட்டியை சேர்ந்த சஞ்சய்(23) என்பவர் வந்திருந்தார். ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27), அசோக்குமார்(35) ஆகியோர் சஞ்சய் நிகழ்ச்சியை பார்க்கவிடாமல் மறைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் சஞ்சயை தாக்கினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார்இ சஞ்சயை அழைத்து சென்றபோது, மீண்டும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் சதீஷ்குமார் மற்றும் அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக, 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.