நாமக்கல், ஜன.20: நாமக்கல் அருகே மரூர்பட்டியில் புதிய கால்நடை மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று அமைச்சர் தங்கமணி திருச்செங்கோட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். அப்போது மரூர்பட்டியில் நடந்த விழாவில் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர், புதிய மருந்தகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆவல்நாய்க்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுமதி, ரீட்டா பழனிசாமி, நிலவள வங்கி தலைவர் ராஜா, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் நடராஜன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மரூர்ப்பட்டி, விட்டமநாய்க்கன்பட்டி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகள் இந்த மருந்தகம் மூலம் பயனடையும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.