×

மல்லசமுத்திரம் அருகே திருமணிமுத்தாறு மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

திருச்செங்கோடு,  டிச.13: மல்லசமுத்திரம் அடுத்த மாமுண்டி கிராமத்தில் திருமணிமுத்தாறு மேம்பாலத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, மலலசமுத்திரம்  அருகே மாமுண்டி கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வழியாக திருமணிமுத்தாறு  ஓடுகிறது. சுமார் 15 ஆண்டுக்கு முன்பு திருமணிமுத்தாற்றின் குறுக்கே  மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை ஆட்டையாம்பட்டி, மாமுண்டி,  சர்க்கார் மாமுண்டி, கரட்டுப்பாளையம், கட்டிபாளையம், சப்பையாபுரம் உள்ளிட்ட  கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும், இதுநாள் வரை  மேம்பாலத்தின் மீது மின்விளக்கு வசதி செய்துதரப்படவில்லை.

இதனால், இரவு  நேரங்களில் தனியாக நடந்து மற்றும் டூவீலர்களில் வருபவர்களை தாக்கி, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், விஷ ஜந்துகளுக்கு பயந்து, அச்சத்துடன் பொதுமக்கள் செல்லவேண்டிய நிலை உள்ளது. பாலத்தின் மீது மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுநாள் வரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, மாமுண்டி திருமணிமுத்தாறு மேம்பாலத்தில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumanimuthar ,Mallasamudram ,bridge ,
× RELATED மல்லசமுத்திரம் அருகே 5 வயது மகனை பிரம்பால் கொடூரமாக தாக்கிய தந்தை