×

மல்லசமுத்திரம் அருகே 5 வயது மகனை பிரம்பால் கொடூரமாக தாக்கிய தந்தை

*தேர்வுக்கு படிக்காததால் ஆத்திரம்

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் அருகே, 1ம் வகுப்பு படிக்கும் 5 வயது மகனை, தேர்வுக்கு படிக்கவில்லை என கூறி, பிரம்பால் சரமாரியாக தாக்கி காயத்தை ஏற்படுத்திய தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(30), கூலித்தொழிலாளி. இவரது 6 வயது மகன், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், பள்ளி முடித்து வீடு திரும்பிய சிறுவன், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். இதை பார்த்த கார்த்திக், மகனை அழைத்து தேர்விற்கு படிக்காமல் ஏன் விளையாடிக் கொண்டிருக்கிறாய் எனக்கூறி, அருகிலிருந்த பிரம்பை எடுத்து சரமாரியாக அடித்துள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன் கத்தி கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டனர். சிறுவனின் முதுகில் தடியால் அடித்ததில் பலத்த காயத்துடன் வீக்கம் ஏற்பட்டது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்பவர்கள், உடனடியாக சைல்டு லைன் எண் 1098க்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அலுவலர் மோகனசெல்வி, பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு, மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, சைல்டு லைன் அலுவலரின் நடவடிக்கையின் பேரில், சிறுவன் மற்றும் அவனது பெற்றோரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நீதிக்குழும நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து, நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், சிறுவன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

The post மல்லசமுத்திரம் அருகே 5 வயது மகனை பிரம்பால் கொடூரமாக தாக்கிய தந்தை appeared first on Dinakaran.

Tags : Prambal ,Mallasamutram ,PRAMBAL SHARAMARI ,Namakkal District ,Mallasamudram ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு