திருப்பூர், டிச. 12: திருப்பூர் மாவட்டத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மையம் அமைப்பது குறித்து வட்டார வள மைய தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
தமிழக அரசு நடப்பு ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் ராயபுரம் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் ரவி முன்னிலை வகித்தார். இதில், 5ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளும், 8ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்கும் வகையில் தேர்வு மையம் அமைக்க வேண்டும். தேர்வு மையங்கள் நன்கு காற்றோட்ட வசதியும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை இருக்கும் வகையில் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் வட்டார வள மைய தலைமை ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.