திருப்பூர், டிச. 12: இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் குடியிரிமை திருத்த மசோதாவை பா.ஜ. அரசு நிறைவேற்றுவதை எதிர்த்து மாணவர்கள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இந்த குடியுரிமை மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாடு தழுவிய மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்துவதென இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று காலை மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் நிருபன் சக்கரவர்த்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் சம்சீர்அகமது, மாவட்ட தலைவர் பிரவின் குமார், கிளை செயலாளர் கல்கிராஜ், கிளை தலைவர் தனசேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் சாலினி, கனகராஜ், துளசிமணி உள்பட சுமார் 50 பேர் பங்கேற்றனர்.