அரியலூர், டிச. 12: அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்கள், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 201 கிராம ஊராட் சிதலைவர் பதவியிடங்கள், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வேட்புமனு தாக்கல் மாவட்ட ஊராட்சிஅலுவலகம், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடந்து வருகிறது. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்கள், 17 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 37 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 167 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் 27ம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அரியலூர் ஒன்றியத்தில் 43,016 ஆண் வாக்காளர், 42,022 பெண் வாக்காளர், 3 இதர வாக்காளர் மொத்தம் 85,041 வாக்காளர்கள் 168 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் அரசு கலை கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை, வாக்குசீட்டுகள் பிரிக்கும் அறை, வாக்குச்சீட்டு எண்ணும் அறையை ஆய்வு செய்தார். மேலும் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டி எடுத்து செல்பவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தனி வழி அமைப்பதற்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக மையம் அமைப்பதற்கான அறை, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்படவுள்ளதை ஆய்வு செய்தார். ஆய்வின்போது திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் பழனிச்சாமி, உதவி காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.