புதுச்சேரி, டிச. 12: முத்தியால்பேட்டை அரசு ஊழியர் கொலையில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர். புதுவை, குருசுகுப்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் லோகநாதன் (50) கடந்த 8ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் அவர் தீர்த்துக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனின் மகன் கோகுல், தாய் மல்லிகா, அக்காள் பிரபா உள்ளிட்ட 10 பேர் கும்பல் மீது கொலை வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். சீனியர் எஸ்பி ராகுல் அல்வாலும் நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கோகுல், அருண்பாண்டி, சதீஷ், குணா, வாசு ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் நேற்று அவர்களை புதுச்சோி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து கத்தி, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய மல்லிகா, பிரபா உள்ளிட்ட மற்ற 5 பேரையும் தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட அவர்கள் திட்டமிட்டிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில் நீதிமன்றம் முன்பு மப்டி உடையிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.