பள்ளிபாளையம், டிச.11: குமாரபாளையம் அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில், மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா, விடியல் சேவை அமைப்பின் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கோவை பால்ராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாகமலை முன்னிலை வகித்தார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஓடி விளையாடு பாப்பா என்ற திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு பயிற்சியினை தலைமை ஆசிரியர் வெற்றிவேல் துவக்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில், கோவை எம்ஆர் குரூப் தலைவர் பிரபு, மாணவர்களுக்கு புத்தகங்கள், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் தேவதாஸ், கமலக்கண்ணன், கார்த்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.