×

மஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு பணம் வழங்கினால் வழக்கு தொடருவோம்

புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு ரகுபதி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3,44,012 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொதுவாக மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரிசி வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என கவர்னரின் ஆலோசனை கூறியதன் பேரில் ஒரு மாதத்திற்கு சிறப்பு நிற அட்டைதாரர்களுக்கு ரூ.600ம், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.300ம் என ரூ.15.66 கோடி பணம் செலுத்தியதாக கடந்த நவம்பர் 7ம் தேதி குடிமை பொருள் வழங்கல் துறையினர் தகவல் அளித்தனர்.

இந்நிலையில் மீதமுள்ள 6 மாதங்களுக்கு அரிசிக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணமாக வழங்குவதற்காக ரூ.93 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு வார காலத்திற்குள் பணம் செலுத்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இது தவறானதாகும். ஏனெனில் அரசு சராசரியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்குவதால் கவர்னர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்து
வோர், வசதி படைத்தோர் என அனைவரும் பயனடைவர். இலவசம் என்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் தவிர, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கக் கூடாது.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.93 கோடி நிதியினை அனைவருக்கும் பொதுவாக வழங்காமல், சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டும் பணம் செலுத்தும் பட்சத்தில் மாதம் ரூ.4,98,06,900 என மொத்தம் ரூ.59,7682,800 மக்கள் வரிப்பணம் வீணாவதை தவிர்க்கலாம். தற்ெபாழுது புதுவையில் பொதுப்பணித்துறையில் பணி முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நிலுவை தொகை வழங்காமலும், எவ்வித மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமலும், பொதுத்துறை ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் அளிக்க முடியாமல் புதுச்சேரியே போராட்ட களமாக மாறியுள்ளது.

மாநிலமே நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசங்கள் வழங்கி அரசு நிதியை கோடி கணக்கில் வீணடிப்பது ஏன்? எனவே, அரசு மூலம் வழங்கப்படும் பணம் மற்றும் இலவசங்கள் அனைத்தையும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடருவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...