×

தங்க நாணயங்கள் திருட்டு தொழிலதிபர் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி,  டிச. 5: புதுவை தொழிலதிபர் வீட்டில் தங்க நாணயங்கள் திருட்டு போன வழக்கில்  வேலைக்கார பெண், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  குற்றவாளியை கண்டுபிடிக்க செல்போன் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். புதுச்சேரி, உழவர்கரை பிரண்ட்ஸ் நகரை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி,  தொழிலதிபர். இவரது மனைவி ஜெயந்தி (57). டெல்லியில் வசிக்கும் மகனை  பார்த்துவிட்டு ஒரு மாதத்திற்குபின் தம்பதியர் வீடு திரும்பினர். இதனிடையே  கடந்த வாரம் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்க பீரோவை ஜெயந்தி  திறந்து பார்த்தபோது அதிலிருந்த தங்க நாணயங்களை 10 பவுன் காணாமல்  அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் ஜெயந்தி  புகார் அளித்தார்.

குறிப்பிட்டு தங்க நாணயங்கள் மட்டும் திருட்டு  போயிருப்பதால் குடும்பத்தினருக்கு அறிமுகமான நபர்கள் மீது சந்தேகமடைந்த  காவல்துறை ஜெயந்தி வீட்டில் வேலை செய்யும் சண்முகாபுரம் பூங்கொடி  மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி  
வருகின்றனர். மேலும் போலீசார் சந்தேகிக்கும் சிலரின் செல்போன் நம்பரில்  பதிவான தகவல்களை சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் மூலம் ஆதாரங்களை  திரட்டி வரும் காவல்துறை ஓரிரு நாளில் அதிரடியாக கைது நடவடிக்கையில் இறங்க  திட்டமிட்டுள்ளனர்.

Tags : friends ,gold coin businessman ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...