×

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சாவு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச. 5: மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் அருந்ததியினத்தை சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆதித்தமிழர் பேரவையின் தேனி மாவட்ட அமைப்பின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் இளந்தமிழன், மேற்கு மாவட்ட செயலாளர் நீலக்கனலன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மேட்டுபாளையம் அருகே நடூரில் தீண்டாமை சுவர் இடிந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தடுப்புச்சுவர் எழுப்பியவரை பாதுகாக்கும் தமிழக அரசு பதவி விலக வேண்டும். நியாயம் கேட்டு போராடிய தலைவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கைதாகியுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,death ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!