காரைக்கால், நவ. 20: காரைக்காலில் சாப்பிட பணம் கேட்ட மதுக்கடை காவலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு நாகூர் அடுத்த பனங்குடி, தங்கமங்கலம் காலனியை சேர்ந்த வடிவேல் மகன் விமல்ராஜ் (31) காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இதே கடையில் காரைக்கால் நிரவி கள்ளர் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் மனோஜ் (26) கேஷியராக பணியாற்றினார். கடந்த 16ம் தேதி பணியில் இருந்த விமல்ராஜ் இரவு 11 மணியளவில் கடையை மூடிய பின்னர் கேஷியர் மனோஜிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். கணக்கு முடிக்காததால் பணம் கொடுக்க முடியாது எனக்கூறி அவர் விமல்ராஜை விரட்டியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, மனோஜ் மற்றும் அங்கு வேலைபார்க்கும் அம்பகரத்தூர் தாமனாங்குடி மாதாகோயில் ெதருவை அலெக்சாண்டர் (30), காரைக்கால்மேடு பிள்ளையார்கோயில் ெதருவை சேர்ந்த கோபால் (40) ஆகிய 3 பேரும் சேர்ந்து விறகு கட்டையால் விமல்ராஜை சரமாரியாக தாக்கினர் இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது சகோதரர் பக்கிரிசாமி கொடுத்த புகாரின் பேரில் டி.ஆர்.பட்டினம் போலீசார் மனோஜ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதுக்கடைக்கு வந்த மனோஜ், அலெக்சாண்டர், கோபால் ஆகியோரை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.