புதுச்சேரி, நவ. 20: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102வது பிறந்த நாள் விழா தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவாக புதுச்சேரி அரசு செய்தி விளம்பரத்துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோடு- விழுப்புரம் சாலை சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் பாலன், விஜயவேணி எம்எல்ஏ, செய்தி விளம்பரத்துறை செயலர் மகேஷ், இயக்குனர் வினயராஜ், காங்கிரஸ் துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையராஜா மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் திரும்ப வாசித்து ஏற்றுக் கொண்டனர்.