×

குண்டும் குழியுமான சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

மணமேல்குடி, நவ.19: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஆலமரம் ஈத்கா மைதானத்தில் இருந்து அரண்மனை தோப்பு வழியாக மீமிசல் செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் சரியில்லாததாலும், சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. ஒருசில சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. ஈத்கா மைதானத்தில் இருந்து அரண்மனை தோப்பு வழியாக மீமிசல் செல்லும் இந்த தார்ச்சாலை பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. எனவே பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது இந்த சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் பெருமளவு குளம் போல தேங்கி நிற்கிறது.

இந்த சாலையானது மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த வழியாக தோப்பில் குடி தண்ணீர் எடுத்து வரக்கூடிய பெண்கள், வாகனத்தில் சென்று குடிதண்ணீர் எடுத்து வரக்கூடிய வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெளியூர் சென்று வரக்கூடிய மாணவர்கள், மீமிசலில் இருந்து பள்ளிக்கூட வேன்கள், மீமிசல் கடைத்தெருவிற்கு சென்று வரக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் இதை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் கிராவல் கொண்டு செப்பனிட வேண்டும் எனவும், மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே தாமதப்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலை மட்டுமல்லாது கோபாலப்பட்டிணத்தில் இதுபோன்று பல இடங்களில் குளம் போல் தேங்கி நிற்கும் சாலையையும் சீரமைக்க கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : ditch road ,
× RELATED கரூர் செங்குந்தபுரம் 12வது குறுக்கு...