×

வி.ஏ.ஓ வேலை கிடைத்ததும் ஏமாற்றினார் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

விழுப்புரம், நவ. 19:  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திருமணம் செய்து ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே பரசுரெட்டிப்பாளையம் கெங்கையம்மன்கோயில் ெதருவைச் சேர்ந்த ராஜா மனைவி பூவழகி(28) என்பவர் தனது 3 வயது குழந்தையான யுவந்திகாவுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது தான், வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன்உடலிலும், குழந்தை உடலிலும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர். விசாரணையில், அவர் கூறியதாவது:எங்கள் ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராஜா(30). நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.

எங்களுக்கு தற்போது 3 வயதில் யுவந்திகா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் எனது கணவர் திருமணம் நடந்த நாள் முதல் இதுவரை என்னையும், குழந்தையும் அவரது வீட்டிற்கு அழைத்துச்செல்லாமல் எங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டார். நானும் பலமுறை இது குறித்துகேட்டபோது, இன்று, நாளை அழைத்துச் செல்கிறேன் என ஏமாற்றிக் கொண்டு வருகிறார். எங்களை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்து வருகிறார். எனது கணவர் தற்போது காவணிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளேன். அப்போது, அதிகாரிகள் முன்பு அமைதியாக குடும்பம் நடத்துவதாக கூறிவிட்டுச் செல்கிறார். அதோடு எங்களை கண்டு
கொள்வதில்லை. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து என்னையும், குழந்தையையும் அவருடன் சேர்த்துவைக்க வேண்டுமென கூறினார். தொடர்ந்து ஆட்சியரிடம் மனுஅளிக்குமாறு அறிவுறுத்திய போலீசார் பின்னர் அனுப்பி வைத்தனர்.


Tags : VAO ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!