×

வெறிநாய் கடி இல்லா சென்னை திட்டத்தின்படி 41 ஆயிரம் தெருநாய்களுக்கு தடுப்பூசி: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: வெறிநாய் கடி இல்லா சென்னை திட்டத்தின்படி, இதுவரை  41 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கால்நடை அலுவலர் கமால் உசேன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வெறிபிடித்த தெரு நாய்கள் சாலையில் நடத்து செல்பவர்களை கடித்து விடுகின்றன. மேலும் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்ேவார் தெரு நாய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வெறிநாய்கடி இல்லாத சென்னை திட்டத்தின்படி தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவற்றின் எண்ணிக்கையை கண்டறிய சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சியில் 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் செந்தில்நாதன், மாநகர கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் ஆகியோர் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 41 ஆயிரம் நாய்களை பிடித்து, அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் கூறியதாவது:7 குழுக்கள் மூலம் நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. தற்போது வரை 8 மண்டலங்களில் 41 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி மாதவரத்தில் 8846, ஆலந்தூரில் 3474, அம்பத்தூரில் 8243, சோழிங்கநல்லூரில் 4461, வளசரவாக்கத்தில் 5869, அண்ணா நகரில் 3346, அடையாறு மண்டலத்தில் 4186, மணலியில் 3,551 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்த திட்டம் செயல்படுத்தும்போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தற்போது வரை 2455 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 மண்டலங்களில் 20 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : street vets ,Corporation ,Chennai ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...