காங்கயம்,நவ.8: காங்கயம் அருகே உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்
காங்கயம் பகுதியில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆங்காங்கே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட ராயர்வலசு என்ற கிராமத்தில் சுப்பராயக்கவுண்டர் என்பவரின் தோட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக நேற்று காலை பணியாளர்கள் அங்கு சென்றனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர் அங்கு திரண்டு மின் கோபுரம் பணி இங்கு நடைபெறக்கூடாது. இங்கு சுமார் 6 ஏக்கர் தோட்டம் முழுவதும் தென்னை மரங்கள் உள்ளது. நீண்ட காலமாக பலன் தரும் இந்த கோப்பை அமைக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மின் கோபுரம் அமைத்தால் தென்னத்தோப்பின் நடுவில் மின் ஒயர்கள் செல்லும்போது தோப்பில் உள்ள சுமார் 400 மரங்கள் பட்டுபோய்விடும். இதனால் வாழ்வாதாரமே கெட்டுவிடும். எனவே,பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கான இழப்பீடு தொகையை அதிகப்படுத்தி தரவேண்டும். இல்லையேல் இங்கு பணி செய்ய அனுமதிக்க என்று கூறி தடுத்துவிட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த காங்கயம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செல்வம்,தாசில்தார் புனிதவதி ஆகியோர் அங்கு சென்று சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மின் கோபுரம் அமைக்கும் பணி துவங்கி நடந்தது.