புதுச்சேரி, அக். 17: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து டெல்லி தலைவர்கள் ஏன் பிரசாரத்துக்கு வரவில்லையென ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அக்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று சங்கரதாஸ் சுவாமிகள் நகர், தேவகி நகர்களில் வீடு, வீடாகச் சென்று ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டிபிஆர் செல்வம், சுகுமாறன், கோபிகா, முன்னாள் வாரிய தலைவர்கள் வேல்முருகன், பாலமுருகன், வேட்பாளர் புவனேஸ்வரன், அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில துணை செயலாளர் கணேசன், உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். பின்னர் ரங்கசாமி கூறுகையில், தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார்கள். அப்போது தங்குவதற்காக புதுச்சேரி வந்தார்கள். அவரை என்.ஆர்.காங்கிரசாரும், புதுச்சேரி அதிமுக தலைவர்களும் சென்று பார்த்தோம்.
அப்போது நான் மறுபடியும் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்திற்கு வர இருப்பதாகவும், அப்போது புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் உறுதியளித்துவிட்டு சென்றுள்ளார்.
ஜெயலலிதாவின் கூற்றை ஏற்று செயல்படுவதாக இருந்தால் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணியே வைத்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. ஜெயலலிதா இருக்கும்போதே ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அதிமுகவுக்கு வழங்கினோம்.
புதுச்சேரி அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் புருஷோத்தமன் மற்றும் தலைவர்கள் தினமும் என்.ஆர். காங்கிரசுடன் பிரசாரத்திற்கு வந்து ஓட்டு கேட்கின்றனர். அவர்கள் அதிமுக தலைவர்கள் இல்லையா? முதல்வர் நாராயணசாமி எதையும், எப்படி வேண்டுமானால் மாற்றி பேசக்கூடியவர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இங்கு வந்து பிரசாரம் செய்கின்றார்களா? என்றார்.